Thursday, October 29, 2009

3. கண்ணன்- என் தந்தை

3. கண்ணன்- என் தந்தை
(நொண்டிச் சிந்து)

பிரதான ரஸம் - அற்புதம்

பூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப்
     பதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;
நேமித்த நெறிப்படி யே - இந்த
     நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளி லெல்லாம் - மனம்
     போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.
சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள்
     தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். 1

செவ்வத்திற்கோர் குறைவில்லை; - எந்தை
     சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;
கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்
     கவிதையின் இனிமையோர் கணக்கி லில்லை;
பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்
     பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;
நல்வழி செல்லு பவரை - மனம்
     நையும்வரை சோதனை செய் நடத்தை யுண்டு. 2

நாவு துணிகுவ தில்லை - உண்மை
     நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திட வே - எங்கள்
     ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;
மூவகைப் பெயர் புனைந்தே - அவன்
     முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே - அவன்
     செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 3

பிறந்தது மறக் குலத்தில் - அவன்
     பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில
     செட்டிமக்க ளொடுமிகப் பழக்க முண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்
     நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!
துறந்த நடைக ளுடையான் - உங்கள்
     சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 4

ஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம்
     ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;
தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்
     தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு
     நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; - பல
     பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 5

இன்பத்தை இனிதென வும் - துன்பம்
     இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;
அன்பு மிகவு முடையான்; - தெளிந்
     தறிவினில் உயிர்க்குலம் எற்ற முறவே,
வன்புகள் பல புரிவான்; - ஒரு
     மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே - பின்பு
     முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 6

வேதங்கள் கோத்து வைத்தான் -அந்த
     வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர்- சொல்லும்
     வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
     வேதத்திற் சிலசில கலந்ததுண்டு
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
     மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7

நாலு குலங்கள் அமைத்தான்; - அதை
     நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,
சீலம் அறிவு கருமம் - இவை
     சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே - வெறும்
     வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
     பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 8

வயது முதிர்ந்து விடினும் - எந்தை
     வாலிபக் களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை; மூப்பு மில்லை - என்றும்
     சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்
     பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
     நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான். 9

துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
     தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;
அன்பினைக் கைக் கொள் என்பான்; - துன்பம்
     அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
     ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
     இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10


No comments:

Post a Comment