Friday, October 30, 2009

நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா





நினைக்கத் தெரிந்த மனமே மறக்கத் தெரியாதா..
 நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா

(நினைக்கத்)

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு கொடுக்கத் தெரியாதா
இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு கசக்கத் தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்கத் தெரியாதா
படரத் தெரிந்த பனியே உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா

(நினைக்கத்)

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு குளிரத் தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா
பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு இணைக்கத் தெரியாதா
இணையத் தெரிந்த தலைவா உனக்கு என்னைப் புரியாதா
தலைவா என்னைப் புரியாதா

(நினைக்கத்)


நலந்தானா நலந்தானா




நலந்தானா நலந்தானா
படம் - தில்லானா மோனாம்பாள்
பாடியவர் - பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
............................
............................

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா


காலங்களில் அவள்




காலங்களில் அவள் வசந்தம்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

(காலங்களில் அவள்)

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி (2)
காற்றினிலே அவள் தென்றல்

(காலங்களில் அவள்)

பால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்
பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்
கவிஞனாக்கினாள் என்னை

(காலங்களில் அவள்)

உள்ளம் என்பது ஆமை...




உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

(உள்ளம் என்பது)



ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?




ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சதாவதானத் திறமை


நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்
சதாவ தானத் தனிப்பெருந் திறமை
தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்
நதியென ஓடி நாளெலாம் உழைத்தல்
நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்
அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி
அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்
மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே
இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!
கருணா நிதியின் தனித்தமிழ் அரசு
பலநாள் நிலைக்கப் பக்குவம் பெற்றது
வாழிய நண்பர்! வாழிய அமைச்சர்!
வாழிய கலைஞர்! வாழிய தமிழர்!


Thursday, October 29, 2009

9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்

9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்

"தேவனே! என்னருமைச் செல்வமே! என்னுயிரே!
போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்!
முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில்
மாங்கிளையிலேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன். 5

ஆங்குவந்தார் ஓர்முனிவர் ஆரோ பெரியரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி யருளினார், மற்றதன்பின்,
'வேத முனிவரே, மேதினியில் கீழ்ப்பறவைச்
சாதியிலே நான் பிறந்தேன், சாதிக் குயில்களைப்போல் 10

இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி,
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்?
மானுடர்போற் சித்தநிலை வாய்த்திருக்குஞ் செய்தியேன்?
யானுணரச் சொல்வீர்' என வணங்கிக் கேட்கையிலே,
கூறுகின்றார் ஐயர்: 'குயிலே! கேள், முற்பிறப்பில் 15

வீறுடைய வெந்தொழிலார்வேடர் குலத்தலைவன்
வீர முருகனெனும் வேடன் மகளாகச்
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ, நல்லிளமை
முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில் 20

யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய்; செழுங்கான வேடரிலுன்
மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான்
காமன் கணைக்கிரையாய், நின்னழகைக் கண்டுருகி,
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, அவன் 25

பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு
நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாகச்
சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை
மாலையிட வாக்களித்தாய்; மையலினா லில்லை; அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய். 30

ஆயிழையே, நின்றன், அழகின் பெருங்கீர்த்தி
தேயமெங்குந் தான்பரவத் தேன்மலையின் சார்பினிலோர்
வேடர்கோன், செல்வமும், நல்வீரமுமே தானுடையான்,
நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடயான்,
மொட்டைப் புலியனுந்தன மூத்த மகனான 35

நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி,
நின்னை மணம்புரிய நிச்சயித்து, நின்னப்பன்
தன்னை யணுகி, "நின்னோர் தையலையென் பிள்ளைக்குக்
கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்" என்றிடலும்,
எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை 40

ஆங்கே உடம்பட்டான்; ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார்.
பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில்
அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு,
மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து 45

நாடிச் சினத்துடனே நானா மொழிகூற
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்,
"காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா, கடுமையினால்
நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும்,
கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும் 50

மாதமொரு மூன்றில் மருமம் சிலசெய்து,
பேதம் விளைவித்துப் பின்னிங்கே வந்திடுவேன்;
தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ? 55

மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா" என்றுரைத்தாய்,
காதலினா லில்லை, கருணையினால் இஃதுரைத்தாய்.
(மாதரசாய், வேடன் மகளான முற்பிறப்பில்,
சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்.)
பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி, 60

நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே
மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே,
காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே,
வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான்
தன்னருமை மைந்தன்; தனியே, துணைபிரிந்து, 65

மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத்
தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை
வாழியவன் கண்டுவிட்டான். மையல் கரைகடந்து
நின்னைத் தனக்காக நிச்சயித்தான்; மாதுநீ
மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய் 70

நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்;
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்;
தோழியரும் வேந்தன் சுடர்க்கோலந் தான்கண்டே
ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே
அஞ்சி மறைந்து விட்டார். ஆங்கவனும் நின்னிடத்தே. 75

"வஞ்சித் தலைவன் மகன்யான்" எனவுரைத்து
"வேடர் தவமகளே! விந்தை யழகுடையாய்!
ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்றுபெற்றேன்;
கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்" என்றிசைக்க,
மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்; 80

"ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு
தையலருண்டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தேநீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்;
மன்னவரை வேண்டேன், மலைக்குறவர் தம்மகள் யான்; 85

கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ?
வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?
பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்
நந்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை,
பொன்னடியைப் போற்றுகிறேன், போய்வருவீர், தோழியரும் 90

என்னைவிட்டுப் போயினரே, என்செய்கேன்?" என்றுநீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன் மகன்
மிஞ்சு நின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே,
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனதுகன்னஞ்
செக்கச் சிவக்க முத்தமிட்டான், சினங்காட்டி 95

நீ விலகிச் சென்றாய் -நெறியேது காமியர்க்கே?
தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக.
"நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே?
பொன்னே, ஒளிர்மணியே, புத்தமுதே, இன்பமே,
நீயே மனையாட்டி, நீயே அரசாணி, 100

நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம்
நின்னையன்றிப் பெண்ணை, நினைப்பேனோ?வீணிலே
எனனை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே
நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின் வீட்டிலுள்ளோர்பால்
என்மனதைச் சொல்வேன், எனதுநிலை யுரைப்பேன். 105

வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன்.
மாதரசே!" என்றுவலக் கைதட்டி வாக்களித்தான்.
பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய்.
வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய் 110

காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே
சேர்ந்துவிட்டாய், மன்னன்றன் திண்டோ ளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்
சிந்தைகொண்டாய், வேந்தன்மகன் தேனில்வீழும்வண்டினைப்போல்
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல், 115

ஆவலுடன் நின்னை யறத்தழுவி, ஆங்குனது
கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே-
சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன்,
மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய் 120

ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன்
நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்துவிட்டான்.
"பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப் பார்!
கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை
மண்ணாக்கி விட்டாள்! என் மானந் தொலைத்துவிட்டாள்! 125

'நிச்சய தாம்பூலம்' நிலையா நடந்திருக்கப்
பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ?"
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கனங்கே.
மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி, 130

தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று
பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன்
ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார்; ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே 135

மாடனங்கு வந்து நின்றான். மற்றிதனைத் தேன்மலையின்
வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை.
நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போலே
எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை.
அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று 140

தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார்,
மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ஙனமே.
மாடன் வெறிகொண்டான், மற்றவனும் அவ்வாறே.
காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையும் தானுமங்கு
தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை. 145

ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு.
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு.
மாடனுந்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே 150

ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான்;
வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே,
சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி
வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம்
பேச்சிழந்தே ஆங்கு, பிணமாகக் கிடந்துவிட்டார். 155

மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்துவிட்டான்.
பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில்
வாரி யெடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும்
மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே
கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான். 160

"பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சிலகணத்தே
ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை,
சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; 165

இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு,
நின்னுடன் வாழ்வனினி நேரும் பிறப்பினிலே!"
என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண்.
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது. 170

பீடையுறு புள்வடிவம் பேதையுனக் கெய்தியது.
வாழிநின்றன் மன்னவனும் தொண்டை வளநாட்டில்
ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில்
மானிடனாத் தோன்றி வளருகின்றான். நின்னையொரு
கானிடத்தே காண்பான். கனிந்துநீ பாடும்நல்ல 175

பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால்
மீட்டு நின்மேற் காதல்கொள்வான், மென்குயிலே!" என்றந்தத்
தென் பொதியை மாமுனிவர் செப்பினார். "சாமீ,
குயிலுருவங் கொண்டேன்யான். கோமானோ மேன்மை
பயிலு மனிதவுருப் பற்றநின்றான், எம்முள்ளே 180

காதலிசைந் தாலும் கடிமணந்தான் கூடாதாம்
சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல்
பொய்யாய் முடியாதோ?" என்றிசைத்தேன், புன்னகையில்
ஐயர் உரைப்பார்; "அடி பேதாய், இப்பிறவி
தன்னிலும் நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் 185

கன்னியெனத் தான்பிறந்தாய் கர்ம வசத்தினால்,
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக்
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே, இப்பிறப்பில் நீயும் பழைமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் 190

நின்னைக் குயிலாக்கி நீசெல்லுந் திக்கிலெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார் நீயிதனைத் தேர்கிலையோ?"
என்றார். "விதியே, இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ? பேய்களெனைப்
பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி, 195

வாதைப் படுத்தி வருமாயின், யானெனது
காதலனைக் காணுங்கால், காய்சினத்தால் ஏதேனும்
தீதிழைத்தால் என்செய்வேன்? தேவரே, மற்றிதற்கோர்
மாற்றிலையோ?" என்று மறுகி நான் கேட்கையிலே,
தேற்றமுறு மாமுனிவர் செப்புகின்றார்:- 'பெண்குயிலே! 200

தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன்
கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும்
மோசம் மிகுந்த முழுமாயச் செய்கைபல
செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல்வேந்தன் 205

ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனும் நின்றனையே
வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது
வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான்
பிந்தி விளைவதெல்லாம் பின்னேநீ கண்டு கொள்வாய்
சந்தி ஐபம் செய்யுஞ் சமயமாய்விட்ட' தென்றே 210

காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர், காதலரே!
மாற்றி உரைக்கவில்லை, மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன். ஐயா! திருவுளத்தில்
எப்படிநீர் கொள்வீரோ, யானறியேன், ஆரியரே!
காத லருள்புரிவீர், காதலில்லை யென்றிடிலோ, 215

சாத லருளி நுமது கையால் கொன்றிடுவீர்!"
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்ததுகாண்.
கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ? பெண்ணென்றால்
பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி
மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ? 220

காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ?
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ?
அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கியபின் மூண்டுவரும் இன்பவெறி
கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை. 225

விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின்
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டுதான்
கண்ணெடுக்கா தென்னைக்கணப் பொழுது நோக்கினாள்; 230

சற்றே தலைகுனிந்தாள், சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை வீழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீன விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம் 235

பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ? பாரின் மிசை
நின்றதொரு மின்கொடிபோல் நேர்ந்தமணிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும், வெட்டினையுங் கட்டினையும்,
தேனி லினியாள் திருத்த நிலையினையும், 240

மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன். கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே, இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் 245

மாதவளின் மேனி வகுத்தான் பிரமெனென்பேன்.
பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண்டாங்ஙனே
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே, 250

பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம்
ஒக்க மறைந்திடலும், ஓஹோ! எனக்கதறி
வீழ்ந்தேன். பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்,
பத்திரிகைக் கூட்டம், பழம்பாய்-வரிசை யெல்லாம் 255

ஒத்திருக்க 'நாம் வீட்டில் உள்ளோம்' எனவுணர்ந்தேன்.
சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும்,
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டுகொண்டேன்.
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும், 260

வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

8. நான்காம் நாள்

8. நான்காம் நாள்

நான்காம்நாள் என்னை நயவஞ்சனைபுரிந்து
வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த
பொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள்
மெய்ம்மை யறிவிழந்தென் வீட்டிலே, மாடமிசை
சித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல், 5

எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம்
மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே,
காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்,
வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்
யானதனைக் கண்டே; 'இது நமது பொய்க் குயிலோ?' 10

என்று திகைத்தேன்; 'இருந்தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை; நாடுமனம்
ஆங்கதனை விட்டுப் பிரிதற்கு மாகவில்லை.
ஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்
வீதியிலே வந்து நின்றேன் மேற்றிசையில் அவ்வுருவம் 15

சோதிக் கடலிலே தோன்றுகரும் புள்ளியெனக்
காணுதலும், சற்றே கடுகி யருகேபோய்,
'நாணமிலாப் பொய்க்குயிலோ,' என்பதனை நன்கறிவோம்
என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்,
நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால், 20

யான்நின்றால் தான்நிற்கும் யான்சென்றால் தான்செல்லும்;
மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது
வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும்
யான்நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்புநாம்
கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த 25

ஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்,
மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்
சின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து,
பொன்னங்குழலின் புதிய ஒலிதனிலே 30

பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தாம்பாடிக்
கொண்டிருத்தல் கண்டேன, குமைந்தேன்; எதிரேபோய்,
"நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம்மையே,
ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும்
எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை 35

நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை"
என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்.
கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்; மறுபடியும்
நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன். ஈங்கிதற்குள்,
வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக் 40

கண்ணிலே பொய்நீர் கடகடெனத் தானூற்றப்,
பண்ணிசைபோ லின்குரலாற் பரவியது கூறிடுமால்;
'ஐயனே, என்னுயிரின் ஆசையே! ஏழையெனை
வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்றெனையே
கொன்றுவிடச் சித்தமோ? கூறீர், ஒருமொழியில்! 45

அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது,
ஞாயிறுதான் வெம்மைசெயில், நாண்மலர்க்கு வாழ்வுளதோ?
தாயிருந்து கொன்றால், சரண்மதலைக் கொன்றுளதோ?
தேவர் சினத்துவிட்டால், சிற்றுயிர்கள் என்னாகும்?
ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே! 50

சிந்தையில்நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன்
வெந்தழலில் வீழ்வேன், விலங்குகளின் வாய்ப்படுவேன்.
குற்றம்நீர் என்மேற் கொணர்ந்ததனை யானறிவேன்;
குற்றநுமைக் கூறுகிலேன்; குற்றமிலேன் யானம்ம!
புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு 55

மென்மையுறக் காதல் விளையாடி னேன்என்றீர்;
என்சொல்கேன்! எங்ஙனுய்வேன்! ஏதுசெய்வேன், ஐயனே!
நின்சொல் மறுக்க நெறியில்லை; ஆயிடினும்
என்மேல் பிழையில்லை; யாரிதனை நம்பிடுவார்?
நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன். 60

வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து
செவ்விதினிங் கென்னைஎன்றன் வேந்தனொடு சேர்த்திடினும்
அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே
புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட, நான்
அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும், 65

எக்கதிக்கும் ஆளாவேன்; என்செய்கேன்? வெவ்விதியே!

7. குயிலும் மாடும்

7. குயிலும் மாடும்

காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே
சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்துநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன்,
கோலப் பறவைகளின் கூட்டமெல்லாங் காணவில்லை.
மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையினிலே 5

நீலக் குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும்,
கீழே யிருந்தோர் கீழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்,
கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன்; நெஞ்சிலனல்
கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன்; 10

கொல்லவாள் வீசல் குறித்தேன், இப் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் 'கொல்லுதலே சூழ்ச்சி' யென
முன்போல் மறைந்துநின்றேன்; மோகப் பழங்கதையைப்
பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்
கொண்டு, குயிலாங்கே கூறுவதாம்: 'நந்தியே! 15

பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!
காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே!
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ?
மானிடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர்தமை
மேனியுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார். 20

காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர், ஆரியரே!
நீள முகமும், நிமிர்ந்திருக்குங் கொம்புகளும்,
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்,
மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்,
வானத் திடிபோல 'மா'வென் றுறுமுவதும், 25

ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல்
காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்.
பார வடிவும் பயிலு முடல்வலியும்
தீரநடையும் சிறப்புமே இல்லாத 30

சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்.
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு,
மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம்,
சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி 35

என்னபயன் பெற்றேன்? எனைப்போலோர் பாவியுண்டோ?
சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன்வயிற்றில்
போற்றுமொளி, முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ?
நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே 40

சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?
வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை.
மூட மதியாலோ, முன்னைத் தவத்தாலோ,
ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்.
மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும் 45

கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர், மேனிவிடாய்
எய்தி யிருக்கு மிடையினிலே, பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன். 50

வாலிலடி பட்டு மனமகிழ்வேன் 'மா' வென்றே
ஒலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்
மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்.
கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில் 55

பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்,
காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே!
தாளைச் சரணடைந்தேன். தையலெனைக் காத்தருள்வீர்.
காதலுற்று வாடுகின்றேன். காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன். 60

ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால்,
தானா வுரைத்தலின்றிச் சாரும் வழியுளதோ?
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்,
இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாண முண்டோ?
தேவர் முன்னே அன்புரைக்கச் சிந்தை வெட்கங் கொள்வதுண்டோ? 65

காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்?
ஆசைதான் வெட்கம் அறியுமோ?" என்றுபல
நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி
பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை
எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே; 70

    காதல், காதல், காதல்;
    காதல் போயிற் காதல் போயிற்!
    சாதல், சாதல், சாதல்
        முதலியன (குயிலின் பாட்டு)

பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
கண்டேன், படைப்புக் கடவுளே! நான்முகனே! 75

பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய்
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்,
காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி
தோற்றுவித்தாய், நின்றன் தொழில் வலிமையாரறிவார்? 80

உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள்போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப் 85

பொல்லா பிரமா, புகுத்திவிட்டாய், அம்மாவோ!
காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்;
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே! 90

சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!
தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டு நெடுவானம், கடலெல்லாம் விந்தையெனில், 95

பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! 100

செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர்
வித்தை முடிந்தவுடன், மீட்டுமறி வெய்திநான்
கையில் வாளெடுத்துக் காளையின்மேல் வீசினேன்.
மெய்யிற் படுமுன் விரைந்ததுதான் ஓடிவிட,
வன்னக் குயில்மறைய மற்றைப் பறவையெலாம் 105

முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க
நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை
வீணிலே தேடியபின், வீடுவந்து சேர்ந்துவிட்டேன்.
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை.
கண்ணிலே நீர்த்தும்பக் கானக் குயிலெனக்கே 110

காதற் கதையுரைத்து நெஞ்சங் கரைத்ததையும்,
பேதை நானங்கு பெரியமயல் கொண்டதையும்,
இன்பக் கதையின் இடையே தடையாகப்
புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும்
ஒற்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் 115

தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்
சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்
இத்தனைகோ லத்தினுக்கும் யான்வேட்கை தீராமல்
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் 120

எண்ணியெண்ணிப் பார்த்தேன், எதுவும் விளங்கவில்லை;
கண்ணிரண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்.



6. இருளும் ஒளியும்

6. இருளும் ஒளியும்

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவெளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்.
மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற,
உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க,
நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு, 5

பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன்,
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்;
நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்.
"ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்?
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் 10

சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி
நின்றதென்னே?" என்று நெரித்துவிட்டார் கேள்விகளை,
இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல்
"என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்.
நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ் 15

வேளை எனைத்தனியே விட்டகல்வீர்" என்றுரைத்தேன்,
நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார்; நைந்துநின்ற தாயார்தாம்
உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார்,
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்;
முற்றும் மறந்து முழுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். 20

பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்,
மண்டு துயரெனது மார்பை யெலாங் கவ்வுவதே!
ஓடித் தவறி உடையனவாம் சொற்களெலாம்
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்
நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25

பேசு மிடைப் பொருளின்பின்னே மதிபோக்கிக்
கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும்
விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான்,
மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்
காலைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன். 30

தங்க முருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பர்; கண்ணுக்குக் கண்ணாகி 35

விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப்புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி 40

மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்,
இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன். 45

துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ!



5. குயிலும் குரங்கும்

5. குயிலும் குரங்கும்

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே-
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்! 5

பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெல்லாம் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் 10

விம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மாவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் 15

சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்ந்தேன்.
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, 20

பேடைக் குயிலிதனைப் பேசியது:-"வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே, 25

எண்ணிநின்றார்தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, 30

வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம் 35

ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே 40

வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? 45

சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்-
வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால் 50

தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்திகொண்டேன்; தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன்; ஆரியரே கேட்டருள்வீர்!"
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்)
    காதல், காதல், காதல்;
    காதல் போயிற் காதல் போயிற்
    சாதல், சாதல், சாதல்.
        முதலியன (குயலின் பாட்டு)
நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில் 55

ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-
காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண்டாங்ஙனே 60

தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
"ஆவி யுருகுதடி, ஹா ஹா!" என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்,
"ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே! 65

பேச முடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்;
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்;
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்;
இப்பொழுதுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்" 70

என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத்
தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், 75

ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே,
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. 80


4. காதலோ காதல்

4. காதலோ காதல்

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபது பேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு துளிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5

ஒன்றே யதுவாய் உலகமெலாந்தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?
நாளொன்று போயினது; நானு மெனதுயிரும், 10

நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்,
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,
(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால், 15

புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச் 20

சென்றுநான் பார்க்கையிலே செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெலாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல்
மீறவெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக் 25

காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்.

3. குயிலின் காதற் கதை

3. குயிலின் காதற் கதை

மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்; மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் 5

ஒற்றைக் குயில் சோக முற்றுத தலைகுனிந்து
வாடுவது கண்டேன் மரத்தருகே போய் நின்று,
"பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்!
ஏழுலகம் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்!
பீழையுனக் கெய்தியதென்? பேசாய்!" எனக்கேட்டேன். 10

மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மனந் தீயுற நின்றேன்.
"காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்றதுவால்.
"வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய், 15

ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்.
காதலர்நீ யெய்துகிலாக் காரணந்தான் யா" தென்றேன்.
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலிக் கதைசொல்ல லாயிற்று:-
"மானக் குலையும் வருத்தமுநான் பார்க்காமல், 20

உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்.
அறிவும் வடிவுங் குறுகி அவனியிலே
சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்,
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ 25

யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன்.
மானுடவர்நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்;
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும், 30

நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங் 35

கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும், 40

வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப் 45

பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னேயோ?
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்.
மஞ்சரே, என்றன் மனநிகழ்ச்சி காணீரோ?
காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்,
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்" என்றதுவே. 50

சின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,
உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப்
பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்;
"காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் 55

சாதலோ சாதல்" எனச் சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில், உள்ளவீ டத்தனையும்
விள்ள ஒலிப்பதலால் வேறொர் ஒலியில்லை,
சித்தம் மயங்கித் திகைப்பொடுதான் நின்றிடவும்,
அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் 60

சோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால்,
நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்;
"காதல் வழிதான் கரடுமர டாமென்பர்;
சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலிலே
நல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; 65

அல்லலற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ்
வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே;
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும், மறவாதீர், மேற்குலத்தீர்!
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல். 70

ஆவி தரியேன் அறிந்திடுவீர், நான் காநாள்,
பாவியிந்த நான்குநாள் பத்துயுகமாக் கழிப்பேன்.
சென்று வருவீர், என் சிந்தை கொடுபோகின்றீர்,
சென்று வருவீர்" எனத் தேறாப் பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிலுங் கூறி மறைந்ததுகாண். 75


2. குயிலின் பாட்டு

2. குயிலின் பாட்டு

ராகம் - சங்கராபரணம்
தாளம் - ஏகதாளம்
ஸ்வரம்- "ஸகா-ரிமா-காரீ
பாபாபாபா-மாமாமாமா
ரீகா-ரிகமா-மாமா"

சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். (காதல்)

1.    அருளே யாநல் லொளியே;
     ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
     இருளே, இருளே, இருளே. (காதல்)

2.    இன்பம், இன்பம், இன்பம்;
     இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
     துன்பம், துன்பம், துன்பம். (காதல்)

3.    நாதம், நாதம், நாதம்;
     நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
     சேதம், சேதம், சேதம். (காதல்)

4.    தாளம், தாளம், தாளம்;
     தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
     கூளம், கூளம், கூளம். (காதல்)

5.    பண்ணே, பண்ணே, பண்ணே;
     பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்,
     மண்ணே, மண்ணே, மண்ணே. (காதல்)

6.    புகழே, புகழே, புகழே;
     புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
     இகழே, இகழே, இகழே. (காதல்)

7.    உறுதி, உறுதி, உறுதி;
     உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
     இறுதி, இறுதி, இறுதி. (காதல்)

8.    கூடல், கூடல், கூடல்;
     கூடிப் பின்னே குமரன் போயின்,
     வாடல், வாடல், வாடல். (காதல்)

9.    குழலே, குழலே, குழலே;
     குழலிற் கீறல் கூடுங்காலை,
     விழலே, விழலே, விழலே. (காதல்)


1. குயில்



1. குயில்

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய 5

செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை;-
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, 10

வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் 15

காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல், 20

இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைகளை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே - கண்டேன் யான்.
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் 25

இன்னிசைப் பாடடினிலே யானும் பரவசமாய்,
"மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?" 30

என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்,
அன்றுநான் கேட்டது, அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; 35

விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!

7. கண்ணன்- எனது சற்குரு


7. கண்ணன்- எனது சற்குரு

புன்னாகவராளி - ரஜாதி - ஏகதாளம்
ரஸங்கள் : அற்புதம், பக்தி

சாத்திரங் கள்பல தேடினேன் - அங்கு
     சங்கையில் லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக்
     கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்
மாத்திரம் எந்த வகையிலும் - சக
     மாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்
     ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன. 1

நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பல
     நாள்கள் அலைந்திடும் போதினில், - நிறைந்
தோடும் யமுனைக் கரையிலே - தடி
     ஊன்றிச் சென்றாரோர் கிழவனார்; - ஒளி
கூடுமுகமும், தெளிவுதான் - குடி
     கொண்ட விழியும், சடைகளும், - வெள்ளைத்
தாடியும் கண்டு வணங்கியே - பல
     சங்கதி பேசி வருகையில், 2

என்னுளத் தாசை யறிந்தவர் - மிக
     இன்புற் றுரைத்திட லாயினர் -"தம்பி,
நின்னுளத் திற்குத் தகுந்தவன், - சுடர்
     நித்திய மோனத் திருப்பவன், - உயர்
மன்னர் குலத்தில் பிறந்தவன், - வட
     மாமது ரைப்பதி யாள்கின்றான்; - கண்ணன்
தன்னைச் சரணென்று போவையேல் - அவன்
     சத்தியங் கூறுவன்" என்றனர். 3

மாமது ரைப்பதி சென்றுநான் - அங்கு
     வாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்றன்
நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லி
     நன்மை தருகெனவேண்டினன்; - அவன்
காமனைப் போன்ற வடிவமும் - இளங்
     காளையர் நட்பும் பழக்கமும் - கெட்ட
பூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்
     போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும், 4

ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்
     ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனி
வேடந் தரித்த கிழவரைக் - கொல்ல
     வேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் -'சிறு
நாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்
     நாளுங் கவலையில் மூழ்கினோன்; -தவப்
பாடுபட் டோ ர்க்கும் விளங்கிடா -உண்மை
     பார்த்திவன் எங்ஙனம் கூறுவான்?' 5

என்று கருதி யிருந்திட்டேன்; -பின்னர்
     என்னைத் தனியிடங் கொண்டுபோய், - "நினை
நன்று மருவுக! மைந்தனே! - பர
     ஞான முரைத்திடக் கேட்பை நீ; - நெஞ்சில்
ஒன்றுங் கவலையில் லாமலே - சிந்தை
     ஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னை
வென்று மறந்திடும் போழ்தினில் - அங்கு
     விண்ணை யளக்கும் அறிவுதான்! 6

சந்திரன் சோதி யுடையதாம் - அது
     சத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்
     சேர்ந்து தழுவி அருள்செயும்; - அதன்
மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்த
     மாயக் களிப்பெருங் கூத்துக் காண் - இதைச்
சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்
     சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 7

"ஆதித் தனிப்பொரு ளாகுமோர்; - கடல்
     ஆருங் குமிழி உயிர்களாம், - அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்
     சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; - இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே - அதன்
     மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்; - வண்ண
நீதி யறிந்தின்பம் எய்தியே - ஒரு
     நேர்மைத் தொழிலில் இயங்குவார்; 8

"சித்தத்தி லேசிவம் நாடுவார்; - இங்கு
     சேர்ந்து களித்துல காளுவார்; - நல்ல
மத்த மதவெங் களிறுபோல் - நடை
     வாய்ந்திறு மாந்து திரிகுவார்; - இங்கு
நித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தை
     நீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்
சுத்த சுகந்தனி யாநத்தம் - எனச்
     சூழ்ந்து கவலைகள் தள்ளியே. 9

"சோதி அறிவில் விளங்கவும் - உயர்
     சூழ்ச்சி மதியில் விளங்கவும் -அற
நீதி முறைவழு வாமலே - எந்த
     நேரமும் பூமித் தொழில் செய்து -கலை
ஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்
     உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே -இன்பம்
மோதி விழிக்கும் விழியினார் - பெண்மை
     மோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், 10

ஆடுதல், பாடுதல். சித்திரம் - கவி
     யாதி யினைய கலைகளில் - உள்ளம்
ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்
     ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்
நாடும் பொருள்கள் அனைத்தையும் - சில
     நாளினில் எய்தப் பெறுகுவார் - அவர்
காடு புதரில் வளரினும் - தெய்வக்
     காவனம் என்றதைப் போற்றலாம். 11

"ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த
     ஞானம் விரைவினில் எய்துவாய்" - எனத்
தேனி லினிய குரலிலே - கண்ணன்
     செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்
     ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்
     ஆட லுலகென நான் கண்டேன்! 12


6. கண்ணன்- என் சீடன்

6. கண்ணன்- என் சீடன்
(ஆசிரியப்பா)

யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்
யாதோ பொருளாம் மாயக் கண்ணன்,
என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,
என்னைத் துணைக்கொண்டு, என்னுடைய முயற்சியால் 5

என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்
மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,
யான்சொலுங் கவிதை என்மதி யளவை
இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று
கருதுவான் போலவும், கண்ணக் கள்வன் 10

சீடனா வந்தெனைச் சேர்ந்தவன், தெய்வமே!
பேதையேன் அவ்வலைப் பின்னலின் வீழ்ந்து
பட்டன தொல்லை பலபெரும் பாரதம்;
உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும்,
தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் 15

சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,
தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்
உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள
மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி
இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் 20

தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,
மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,
புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்,
பலவகை யால்அகப் பற்றுறச் செய்தான்;
வெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர் 25

அவலாய் மூண்டது; யானுமங் கவனை
உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,
"இன்னது செய்திடேல், இவரொடு பழகேல்,
இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்,
இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், 30

இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்?
எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,
ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்
கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம்
எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் 35

நெறியினுக் கெல்லாம் நேரெதிர் நெறியே
நடப்பா னாயினன். நானிலத் தவர்தம்
மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்
தெய்வமாகக் கொண்ட சிறுமதி யுடையேன்,
கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் 40

விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,
உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்
தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்
இகழுமிக் கவனாய், என்மனம் வருந்த
நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் 45

கண்ணனும் தனது கழிபடு நடையில்
மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்
கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை
இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்
நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் 50

தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது
முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்
பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்
நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்
தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் 55

சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்.
தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்,
மானுடன் தவறி மடிவுறா வண்ணம்,
கண்ணளை நானும் காத்திட விரும்பித்
தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும், 60

சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,
கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்
எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்
கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை
கண்ணன் பித்ததனாய்க் காட்டா ளாகி, 65

எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,
எவ்வகைப் பயனிலுங் கருத்திழந்தவனாய்,
குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்
யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்.
இதனால், 70

அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற;
யான்கடுஞ் சினமுற்று 'எவ்வகை யானும்
கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்'
எனப்பெருந் தாபம் எய்தினே னாகி
'எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் 75

ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய
நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்'
என்றுளத் தெண்ணி இசைந்திடுஞ் சமயங்
காத்திருந் திட்டேன், ஒருநாள் கண்ணனைத்
தனியே எனது வீட்டினிற் கொண்டு, 80

"மகனே, என்பால் வரம்பிலா நேசமும்
அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி,
நின்னிட மொன்று கேட்பேன்; நீயது
செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே
மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். 85

சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்
மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்
கொண்டோ ர் தமையே அருகினிற் கொண்டு
பொருளினுக் கலையும் நேரம் போக
மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி 90

இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்;
பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்
அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.
ஆதலால்,
என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் 95

என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை
வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே
என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,
இவ்வுரைக் கிணங்குவாய்" என்றேன். கண்ணனும்,
"அங்ஙனே புரிவேன். ஆயின் நின்னிடத்தே 100

தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது?
காரிய மொன்று காட்டுவை யாயின்,
இருப்பேன்" என்றான். இவனுடை இயல்பையும்
திறனையுங் கருதி, "என் செய்யுளை யெல்லாம்
நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் 105

கொடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி" என்றேன்.
நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;
"செல்வேன்" என்றான்; சினத்தோடு நானும்
பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்
கையினிற் கொடுத்துக் "கவினுற இதனை 110

எழுதுக" என்றேன்; இணங்குவான் போன்றதைக்
கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்;
"செல்வேன்" என்றான். சினந்தீ யாகிநான்
"ஏதடா, சொன்ன சொல் அழித்துரைக் கின்றாய்;
பித்த஦ன்ன றுன்னை உலகினர் சொல்வது 115

பிழையிலை போலும்" என்றேன், அதற்கு,
"நாளைவந் திவ்வினை நடத்துவேன்" என்றான்
"இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்
செய்கின் றனையா? செய்குவ தில்லையா?
ஓருரை சொல்" என் றுறுமினேன். கண்ணனும் 120

"இல்லை" யென் றொருசொல் இமைக்குமுன் கூறினான்.
வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்
கண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான்
"சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும்
இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே; 125

என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ
போந்திடல் வேண்டா, போ, போ, போ" என்று
இடியுறச் சொன்னேன். கண்ணனும் எழுந்து
செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட
"மகனே! போகுதி வாழ்கநீ, நின்னைத் 130

தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை
செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்.
தோற்றுவிட் டேனடா! சூழ்ச்சிகள் அறிந்தேன்.
மறந்தினி வாராய், செல்லுதி வாழி நீ!"
எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். 135

சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தே
எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;
காட்டிய பகுதியைக் கவினுறு வரைந்தான்;
"ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்வேன்.
தொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும், 140

இனிநினக் கென்னால், எய்திடா" தெனப்பல
நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான்.
மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்
நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்
"மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் 145

அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;
தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே
வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெலாம்
ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து
வாழ்க நீ" என்றான். வாழ்கமற்ற றவனே! 150




5. கண்ணன் - என் அரசன்

5. கண்ணன் - என் அரசன்

பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
     பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ
     நாள்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். 1

கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
     கண்ணிற் காண்ப தரினெத் தோன்றுமே
எண்ணமிட்டெண்ண மிட்டுச் சலித்துநாம்
     இழந்த நாட்கள் யுகமெனப் போகுமே. 2

படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
     பணமுண்டாக்கல் எதுவும் புரிந்திடான்
'இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்'
     என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான். 3

கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
     கோலு யர்த்துல காண்டு களித்திட
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்
     மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். 4

வான நீர்க்கு வருந்தும் பயிரென
     மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிர்க்கவும்,
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துகள்
     தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். 5

காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
     கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;
     நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? 6

நாம வனவலி நம்பியி ருக்கவும்,
     நாணமின்றிப் பதுங்கி வளருவான்;
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;
     சிறுமை கொண்டொளித் தோடவுஞ் செய்குவான். 7

தந்திரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
     சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
     வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான். 8

காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
     கணத்தி லேபுதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப் போலவே,
     அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். 9

வேரும் வேரடி மண்ணு மிலாமலே
     வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
     பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். 10

சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
     தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;
இக்க ணத்தில் இடைக்கண் மொன்றுண்டோ?
     இதனுள் ளேபகை மாய்த்திட வல்லவன்காண்! 11

கண்ண னெங்கன் அரசன் புகழினைக்
     கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருங்கவந் தேனெனைத்
     தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். 12

நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
     நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
     வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். 13

கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
     கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!
அண்ண லின்னருள் நாடிய நாடுதான்
     அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! 14


4. கண்ணன் - என் சேவகன்

4. கண்ணன் - என் சேவகன்

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்;
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார். 5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார். 10

சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான், "இடைச்சாதி நான்" என்றான்;
"மாடு கன்றுமேய்த்திடுவேன்; மக்களைநான் காத்திடுவேன்; 15

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; 20

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவாணர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;
கற்றவித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆனபொழுதுங்கோலடி குத்துப்போர் மற்போர் 25

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்"
என்று பலசொல்லி நின்றான். "ஏதுபெயர் சொல்" என்றேன்
"ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை" என்றான்
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்ல குணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் - ஈங்கிவற்றால்; 30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
"மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு" கென்றென். "ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் 35

ஆன வயதிற் களவில்லை; தேவாணர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை" யென்றான்.
பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை 40

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம் 45

எண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடுசுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் 50

பண்டமெல்லாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோவந்தான் இடைச்சாதியென்று சொன்னான். 55

இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்துவிட்டேன்!
கண்ணன் எனதகத்தே கால்வைத்தநாள் முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம், 60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
கண்ணனெனை யாட் கொள்ளக் காரணமும் உள்ளனவே!


3. கண்ணன்- என் தந்தை

3. கண்ணன்- என் தந்தை
(நொண்டிச் சிந்து)

பிரதான ரஸம் - அற்புதம்

பூமிக் கெனைய னுப்பி னான்; - அந்தப்
     பதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;
நேமித்த நெறிப்படி யே - இந்த
     நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே
போமித் தரைகளி லெல்லாம் - மனம்
     போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.
சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள்
     தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். 1

செவ்வத்திற்கோர் குறைவில்லை; - எந்தை
     சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;
கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்
     கவிதையின் இனிமையோர் கணக்கி லில்லை;
பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்
     பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;
நல்வழி செல்லு பவரை - மனம்
     நையும்வரை சோதனை செய் நடத்தை யுண்டு. 2

நாவு துணிகுவ தில்லை - உண்மை
     நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;
யாவருந் தெரிந்திட வே - எங்கள்
     ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;
மூவகைப் பெயர் புனைந்தே - அவன்
     முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;
தேவர் குலத்தவன் என்றே - அவன்
     செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 3

பிறந்தது மறக் குலத்தில் - அவன்
     பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;
சிறந்தது பார்ப்பன ருள்ளே; - சில
     செட்டிமக்க ளொடுமிகப் பழக்க முண்டு;
நிறந்தனிற் கருமை கொண்டான்; - அவன்
     நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!
துறந்த நடைக ளுடையான் - உங்கள்
     சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 4

ஏழைகளைத் தோழமை கொள்வான்; - செல்வம்
     ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;
தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்
     தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;
நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒரு
     நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.
பாழிடத்தை நாடி யிருப்பான்; - பல
     பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 5

இன்பத்தை இனிதென வும் - துன்பம்
     இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;
அன்பு மிகவு முடையான்; - தெளிந்
     தறிவினில் உயிர்க்குலம் எற்ற முறவே,
வன்புகள் பல புரிவான்; - ஒரு
     மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;
முன்பு விதித்த தனையே - பின்பு
     முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 6

வேதங்கள் கோத்து வைத்தான் -அந்த
     வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;
வேதங்க ளென்று புவியோர்- சொல்லும்
     வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;
வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்
     வேதத்திற் சிலசில கலந்ததுண்டு
வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்த
     மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7

நாலு குலங்கள் அமைத்தான்; - அதை
     நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,
சீலம் அறிவு கருமம் - இவை
     சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;
மேலவர் கீழவரென்றே - வெறும்
     வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்
போலிச் சுவடியை யெல்லாம் - இன்று
     பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 8

வயது முதிர்ந்து விடினும் - எந்தை
     வாலிபக் களையென்றும் மாறுவதில்லை
துயரில்லை; மூப்பு மில்லை - என்றும்
     சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;
பயமில்லை, பரிவொன்றில்லை, - எவர்
     பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை
நயமிகத் தெரிந்தவன் காண்; - தனி
     நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான். 9

துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்
     தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;
அன்பினைக் கைக் கொள் என்பான்; - துன்பம்
     அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்
என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்
     ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;
இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்
     இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10


2. கண்ணன்- என் தாய்



2. கண்ணன்- என் தாய்


(நொண்டிச் சிந்து)




உண்ண உண்ணத் தெவிட்டாத - அம்மை
     உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்;
வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்
     வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னைக்
     கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல
     மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். 1


இன்பமெனச் சில கதைகள் - எனக்
     கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்
துன்பமெனச் சில கதைகள் - கெட்ட
     தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்
என்பருவம் என்றன் விருப்பம் - எனும்
     இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவரு வாள்; -அதில்
     அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன். 2


விந்தைவிந்தை யாக எனக்கே - பல
     விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;
சந்திரனென் றொரு பொம்மை - அதில்
     தண்ணமுதம் போல ஒளி பரந்தொழுகும்.
மந்தை மந்தையா மேகம் - பல
     வண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
     முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலையே. 3


வானத்து மீன்க ளுண்டு - சிறு
     மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மனம்
     நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;
கானத்து மலைக ளுண்டு - எந்தக்
     காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;
மோனத்தி லேயிருக்கும் - ஒரு
     மொழியுரை யாதுவிளை யாடவருங்காண். 4


நல்லநல்ல நதிகளுண்டு - அவை
     நாடெங்கும் ஓடிவிளை யாடி வருங்காண்;
மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்
     விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;
எல்லையதிற் காணுவ தில்லை; - அலை
     எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
     ஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். 5


சோலைகள் காவினங் கள் - அங்கு
     சூழ்தரும் பலநிற மணிமலர் கள்
சாலவும் இனியன வாய் - அங்கு
     தருக்களில் தூங்கிடும் கனிவகை கள்
ஞாலமுற்றிலும் நிறைந் தே - மிக
     நயந்தரு பொம்மைகள் எனக்கென வே;
கோலமுஞ் சுவையு முற - அவள்
     கோடிபல கோடிகள் குவித்துவைத் தாள். ௬




தின்றிடப் பண்டங்களும் - செவி
     தெவிட்டறக் கேட்கநற் பாட்டுக ளும்,
ஒன்றுறப் பழகுதற் கே - அறி
     வுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;
கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்
     கொடுநெருப் பாய், அனற் சுவையமு தாய்,
நன்றியல் காதலுக் கே - இந்த
     நாரியர் தமையெனைச் சூழவைத் தாள். 7


இறகுடைப் பறவைக ளும் - நிலந்
     திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள்
அறைகடல் நிறைந்திட வே - எண்ணில்
     அமைந்திடற் கரியபல் வகைப்பட வே
சுறவுகள் மீன்வகை கள் - எனத்
     தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;
நிறைவுற இன்பம்வைத்தாள்; - அதை
     நினைக்கவும் முழுதிலுங் கூடுதில்லை. 8


சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
     தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினி லே - நான்
     வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும் - மதக்
     கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்
மூத்தவர் பொய்ந் நடை யும் - இன
     மூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்! 9


வேண்டிய கொடுத்திடு வாள்; - அவை
     விரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;
ஆண்டருள் புரிந்திடு வாள்; - அண்ணன்
     அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;
யாண்டுமெக் காலத்தி னும் - அவள்
     இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன்.
நீண்டதோர் புகழ்வாழ் வும் - பிற
     நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். 10








1. கண்ணன்- என் தோழன்




1. கண்ணன்- என் தோழன்


புண்ணாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம் - வத்ஸலரஸம்


பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்

     புறங்கொண்டு போவதற்கே - இனி

என்ன வழியென்று கேட்கில், உபாயம்

     இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்

"கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்

     காணும் வழியொன் றில்லேன் - வந்திங்கு

உன்னை யடைந்தனன்" என்னில் உபாயம்

     ஒருகணத் தேயுரைப் பான். 1


கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்

     கலக்க மிலாது செய்வான்; - பெருஞ்

சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்

     தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்

ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்

     உற்ற மருந்துசொல் வான்; - நெஞ்சம்

ஈனக் கவலைக ளெய்திடும் போதில்

     இதஞ்சொல்லி மாற்றிடு வான்; 2


பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு

     பேச்சினி லேசொல்லு வான்;

உழைக்கும் வழிவினை யாளும் வழிப்பயன்

     உண்ணும் வழியுரைப் பான்;

அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்

     அரைநொடிக் குள்வரு வான்;

மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்

     வாழ்வினுக் கெங்கள்கண்ணன்; 3


கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்

     கேலி பொறுத்திடுவான்; - எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்

     ஆறுதல் செய்திடு வான்; - என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று

     நான்சொல்லும் முன்னுணர் வான்; - அன்பர்

கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு

     கொண்டவர் வேறுள ரோ? 4


உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்

     ஓங்கி யடித் திடுவான்; - நெஞ்சில்

கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன் னாலங்கு

     காறி யுமிழ்ந்திடு வான்; - சிறு

பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட

     பாசியை யெற்றி விடும் - பெரு

வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி

     மெலிவு தவிர்த்திடு வான். 5


சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்

     சிரித்துக் களித்திடு வான்; - நல்ல

வன்ன மகளிர் வசப்பட வேபல

     மாயங்கள் சூழ்ந்திடு வான்; - அவன்

சொன்ன படி நடவாவிடி லோமிகத்

     தொல்லை யிழைத்திடு வான்; - கண்ணன்

தன்னை யிழந்து விடில், ஐயனே! பின்

     சகத்தினில் வாழ்வதி லேன். 6


கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்

     குலுங்கிடச் செய்திடு வான்; - மன?

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி

     தழைத்திடச் செய்திடு வான்; - பெரும்

ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று

     அதனை விலக்கிவிடு வான்; - சுடர்த்

தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்

     தீமைகள் கொன்றிடு வான். 7


உண்மை தவறி நடப்பவர் தம்மை

     உதைத்து நசுக்கிடுவான்; - அருள்

வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்

     மலைமலை யாவுரைப் பான்; - நல்ல

பெண்மைக் குணமுடையான்; - சில நேரத்தில்

     பித்தர் குணமுடை யான்; - மிகத்

தண்மைக் குணமுடை யான்; - சில நேரம்

     தழலின் குணமுடை யான். ௮


கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்

     குணமிகத் தானுடை யான்; - கண்ணன்

சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு

     சூதறி யாதுசொல் வான்; - என்றும்

நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது.

     நயமுறக் காத்திடு வான்; - கண்ணன்

அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்

     அழலினி லுங்கொடி யான். 9


காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்

     கண்மகிழ் சித்திரத் தில் - பகை

மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்

     முற்றிய பண்டிதன் காண்; - உயர்

வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்

     மேவு பரம்பொருள் காண்; - நல்ல

கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்

     கீர்த்திகள் வாழ்த்திடு வேன். 10